+91 9444406997, 9003000250

ashacindia@gmail.com

  • Home
  • About Us
  • Gallery
  • Office Bearers
  • Member
  • Grievances
  • Application
    • Member Application
  • Trainings
  • Contact Us

குரங்கம்மையும் (MONKEY POX) கரும்பனிச்சை அம்மையும் (BLACK VESICLE POX)


அம்மையை மாரி நோய் என சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது. மழைத்துளி உடலில் சட சட என விழுவது போல் திடீர் கொப்புளங்கள் எழும்புவதால் இதனை மாரி நோய் என தமிழ் மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன. வைசூரி, அம்மை, கொள்ளை நோய் என இதற்கு வேறு பெயர்களும் உண்டு. கொத்துக்கொத்தாக மனிதர்களை தாக்குவதால் இதனை கொள்ளை நோய் என்று அழைத்தனர். சாரம் (Skin or Plasma) என்னும் முதற் சத்தில் வரும் பொழுது சரமாரி என்றும், இரத்தம் (Blood) என்னும் இரண்டாம் சத்தில் வரும் பொழுது இரத்தமாரி என்றும் அழைக்கின்றனர்.
நவீன அறிவியலின் படி‌ குரங்கு அம்மையில் ஐந்து நிலைகள் குறிப்பிடப்படுகின்றன. பொதுவாக தலையில் அதாவது முகத்தில் இந்நோய் முதலில் ஆரம்பிக்கிறது. (The rash typically starts on the face before spreading to other parts of the body, including the palms, soles, and mucous membranes)

  • முதல் நிலையில் தட்டையாக சிவப்பு நிற புள்ளிகளுடன் காணப்படுகிறது (Stage 1 - Macules: Flat, red spots appear on the skin).
  • இரண்டாம் நிலையில் சற்று தடிப்புடன் ஆங்காங்கே பரவத்தொடங்குகிறது (Stage 2 - Papules: These spots raise into bumps as the rash progresses).
  • மூன்றாம் நிலையில் திரவத்துடன் கூடிய கொப்புளங்களாக மாறுகிறது (Stage 3 - Vesicles: The bumps fill with clear fluid, forming blisters).
  • நான்காம் நிலையில் சீழ் கோர்த்த கொப்புளங்களாக மாறி கடும் வலியை ஏற்படுத்துகிறது‌ (Stage 4 - Pustules: The vesicles become pus-filled, leading to pustules that are firm and painful).
  • ஐந்தாம் நிலையில் குருக்கள் கருப்பாக மாறி விழுந்து மாறாத தடங்களை ஏற்படுத்துகின்றன் (Stage 5 - Scabs: The pustules dry out, forming scabs that eventually fall off, often leaving scars).

இந்த குறிகுணங்கள் யாவும் சித்த மருத்துவம் குறிப்பிடும் கரும்பனிச்சை (Black scalds pox) என்ற அம்மை நோயை ஒத்து காணப்படுகின்றன.

மனிதர்களுக்கு தோன்றும் பல்வேறு வகை அம்மை நோய் பற்றி அகஸ்தியர் வைசூரி நூல் - 80 சிறப்பாக குறிப்பிடுகிறது. அம்மை நோய் வருவதற்கு காரணங்களாக அகத்தியர் கூறுவதாவது.


“ஆமென்ற வைசூரியது வருவதேது அழலான காரணந்தா னறியச்சொல்வோம், ஓமென்றசரீரத்தில் வேகமிஞ்சி வெக்கையொடு கிரேகமெல்லாஞ் சூடு கொண்டு, காமென்ற மூளையது கொதிப்பு மீறிக் கனமான அஸ்தியதைத் துளைத்துக்கொண்டு, பாமென்ற பதினொரு ரோகந்தானும் பரிவாக திரேகத்திற்பிறந்த வாறே”


உடலில் வெப்பம் அதிகரிக்கும் பொழுது உடல் உள் உறுப்புகளில் வெப்ப மிகுந்து நரம்புகள் மற்றும் மூளை பாதிக்கப்பட்டு எலும்புகள் துளைக்கப்பட்டு 11வகை அம்மை நோய்களாக கொப்பளித்து வெளியேறுகின்றன. ஆகவே வெப்பத்தை தணிக்கக்கூடிய இளநீர், மோர், நீராகாரம், சீரகத் தண்ணீர் ஆகியவற்றை முன்னெச்சரிக்கையாக எடுத்துக் கொள்வது நல்லது. உடலின் வெப்பம் அதிகப்படாதவாறு குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும். அம்மையால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கி பழகுவதை தவிர்க்க வேண்டும்


“வாறான வை சூரியது கண்டபேரை வளமாக மற்றொருவர் கண்டபோதே, தேறாத பயஞ்சனித் திருதயத்திற் றிறமில்லாக் கமலமதில் கொதிப்புண் டாக்கி, சீரானவகையுடனே ரோகங்காணுஞ் சேகர மாய்ச் சரீரத்திற் பற்றிக்கொள்ளும், மாறாமற் பதி னொன்றின் பேரேதென்னில் வகையாகச் சொல்லுகி றேன் கேளுகேளே”


அம்மை நோயால் பாதிக்கப்பட்டவரை மற்றொருவர் அருகில் இருந்து பார்க்கும் பொழுது பயம், மனப்பதட்டம் அதிகமாகி இதயத்துடிப்பு மிகுந்து அதன் காரணமாக அவர்களின் உடல் சூடும் அதிகரித்து அம்மை உண்டாகிறது என அகத்தியர் குறிப்பிடுகின்றார்.


பனைமுகாரி, பாலம்மை, வரகுதரி, கொள்ளம்மை, கல்லுதரி, கடுகம்மை, மிளகம்மை, உப்புதரி, கரும்பனிச்சை, வெந்தய அம்மை மற்றும் பாசிப்பயிற்றம்மை என 11 அம்மை பற்றி அகத்தியர் வைசூரி நூல் 80 நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன.


கரும்பனிச்சை அம்மை


“தானென்றக் கரும்பனிச்சை குணத்தைக்கேளு தரியாமல் காய்ச்சல்கண்ட நாலாநாளில், சானென்ற சிரசுதனில் குருவேகாணுங் கைக்கடுங்கா கடுப்பெ டுத்துக் கருகுமேனி, வானென்ற குருவதுவு முள் ளேவாங்கும் வளமாக பேதிகண்டு மூர்ச்சையாகும், கோனென்ற மலசலமுங்கட்டித்தானால் குறிப்பாக பதின்மூன்றி விறங்குந்தானே”


கரும்பனிச்சை அம்மையில் கடுமையான காய்ச்சல் தோன்றி, நான்காம் நாளில் தலையில் ஆரம்பித்து அம்மை கொப்புளங்கள் தோன்றி உடம்பு முழுவதும் தாங்க முடியாத வலியை ஏற்பட்டு குருக்கள் கருப்பு நிறத்துடன் காய்ந்து உள்வாங்கும். வயிற்றுப்போக்கு மயக்கம் உண்டாகி 13 ஆம் நாளில் அம்மையின் வேகம் குறையும். சில நேரத்தில் வயிற்றுப் போக்குக்கு பின்பு மலமும் சிறுநீரும் கட்டுப்பட்டு 13 ஆம் நாள் குணம் ஏற்படும். அவ்வாறு அம்மை இறங்காமல் சில நேரங்களில் நோய் தீவிரம் அதிகப்படும் பொழுது, அம்மை கொப்புளங்களில் கிருமித் தொற்று ஏற்பட்டு, நினைவு தடுமாறி, மார்பில் சளி தேங்கி மூச்சு வாங்கி உயிருக்கு ஆபத்து ஏற்படும். இந்நிலையில் 21 நாட்கள் கழித்து முழுமையான குணம் ஏற்படலாம். பின்பு தலை முழுகுவது நல்லது. இது குரங்கு அம்மையில் கூறப்படும் ஐந்து நிலைகளை ஒத்து காணப்படுகிறது.


இந்நோயில் கொப்புளங்கள் மிகுதியாக தோன்றுவதால் கொப்பளப் புண்களில் கிருமித் தொற்று ஏற்பட்டு புழுக்கள் அதாவது பாக்டீரியா போன்ற கிருமிகள் மிகுந்து செப்டிசீமீயா (pus) என்ற நிலை ஏற்படும். நோயின் ஆரம்ப கட்டத்திலேயே மருந்து அளிக்கா விட்டால் நோய் தீவிரப்பட்டு இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பிழைப்பது அரிதாகும். கர்ப்பிணிகளுக்கு இந்நோய் ஏற்பட்டால் கர்ப்பம் அழிந்துவிடும். பின் கரு உற்பத்தி ஏற்படாது. மூளை நரம்புகளை பாதித்து காது கேட்கும் திறனும் குறைந்து விடும். சிலருகாகு நோய் அசாத்தியம் என்றால் 14 நாட்களில் குணம் ஏற்படவில்லை என்றால் நோயாளி பிழைப்பது கடினம். ஆனால் தக்க மருத்துவத்தால் 21 நாட்களில் குணம் உண்டாகலாம் என அகத்தியர் குறிப்பிடுகிறார்.


அதுபோல் ஆண்களுக்கு இந்த அம்மை பாதிப்பு ஏற்படும் பொழுது விதைப்பையை தாக்கி விந்து உற்பத்தியை குறைத்து விடும்.


“நவிலுவோ மிவர்களுக்கு மருந்துகேளு நலமாகக் காய்ச்சல்கண்ட வுடனே நீதான், புவிதனிலேயழ கான பாதரட்சைப் புகழாகச் சுட்டதனைப் பற்பமாக்கி, பவிலாக வொருகடிதான் வென்னீர்தன்னில் பாகமாய்க் கொண்டுவிடு மூன்றுநேரம், தவிராமல்செய்த பின்பு சொல்லக்கேளு சாதகமாய்ப்பின் மருந்து மொழியக் கேளே”.


அம்மை நோய் அறிகுறி கண்டவுடன் பாதரட்சை என்ற சிறு செருப்படை செடியை சாம்பலாக்கி ஐந்து முதல் 10 கிராம் அளவு வெந்நீரில் மூன்று வேளை கொடுத்து வரலாம். சில நூலோர் பாதரட்சை என்பது தோலால் செய்யப்பட்ட காலணி என்றும் அதனை சுட்டு சாம்பலாக்கி வெருகடி அளவு எடுத்து வெந்நீரில் தினமும் மூன்று தடவை கொடுத்து வர குணம் உண்டாகும் எனக் குறிப்பிடுகின்றனர்.


பூசவே புண்ணாறு மிதனை நன்றாய்ப் புகழாகச்செய்துவர வீக்கம் போகும், நேசமாய் வைசூரியது சரிந்தேழாம்காள் நினைவாகவாரோக்கிய ஸ்நானஞ் செய்ய, வாசமாய்ச் சொல்லுகிறேன் கேளுநன்றாய் வகையான பருத்திப்பிஞ்சச்சிப்பிஞ்சும, பாசமாய் சாதிக்காய்ச் சீரகமுங்கூட்டிப் பரிவாக மோரிலரைத் துள்ளே கொள்ளே. பருத்தி பிஞ்சு, அத்திப்பிஞ்சு, சீரகம் மற்றும் ஜாதிக்காய் ஆகிய சேர்த்து ஓர் விட்டு அரைத்து கொடுக்க வீக்கம் குறையும்.


“சேரும் பத்தியத்தைக்கேளு திறமாகச் சாதஞ் செய்து, ஆறுமேயாறவைத்து வழகுடன் மிளகுநீரும் காருமே வகையாய்ச் செய்துக் கணம்பெறக் கொள்ள நன்றாம், பாருமே வைசூரிதானும் பரிவுட னிறக்க மாமே.”


சாதம் வடித்த பின்பு ஆரம்பித்து அத்துடன் மிளகு ரசம் வைத்து கொடுக்க வேண்டும். அல்லது நோயால் பாதிக்கப்பட்டவர் சுடு கஞ்சி மட்டுமே உட்கொள்ள வேண்டும். கோழி அவரை விதையுடன் வெங்காயம் சேர்த்து நீராகாரத்தில் அரைத்து கரைத்து உட்கொள்ள வேண்டும். வெளியில் எங்கும் செல்லக்கூடாது. பிரா இலை மூக்கிரட்டை வேர் தவசி முருங்கை ஆகியவற்றை அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து அரைப்படி நீராகரத்துடன் கலந்து குடித்து வரவேண்டும். அவ்வாறு உட்கொள்ளும் நீராகாரத்துடன் சீரகமும் வெங்காயம் சேர்த்து உட்கொள்வது நல்லது.


கழிச்சல் அதிகமாக இருந்தால் அதனை குணப்படுத்த இச்சி மரத்தின் இலையை கசக்கி அத்துடன் நீராகாரம் சேர்த்து கலக்கி வடிகட்டி மூன்று நாட்கள் உட்கொள்ள கழிச்சல் நீங்கும். வேப்பம் ஈர்க்கு குடிநீர் என்ற சுக்கு வேப்பமிட்டு விளாமிச்சை வேர், மூன்றையும் கூட்டி கசாயம் செய்து குடிக்கலாம்.


ஆலம்பித்து, அத்திவித்து, அரச வித்து, ஒதிய வித்து, இச்சி வித்து, துத்தி வித்து, காசான்வித்து, ஆவாரை வித்து ஆகியவற்றை சம அளவு எடுத்து குடிநீர் செய்து அத்துடன் கற்கண்டு சேர்த்து குடிக்க அம்மையில் ஏற்படும் எல்லா வகை சுரமும், கழிச்சலும் நீங்கும்.


வெள்ளத்தி வேலம்பட்டை வெங்காயம், சீரகம் நான்கையும் அரைத்து வெள்ளாட்டு பாலில் கலந்து கொடுக்கலாம்.


சுரம் உடனே குறைய கசாயம்


“ஆமென்ற சூரியது சுரமேகண்டால் அழகான வெலுமிச்சம் வேரின்பட்டை, சேமென்றவேலமுடன் சீந்திலாமிச்சந்திறமான பற்படகம்சந்தனமு முத்தம், பானென்ற வகையைந்தும்விராகன் வீதம் பண்பாகக் கியாழஞ்செய்மூன்றுநேரம், வாமென்று குடித்திடவே சுரமுந்தீரும் வளமாக விம்மருந்தை வளமாய்ச் செய்யே”


எலுமிச்ச மரத்தின் வேர்ப்பட்டை, வேலம்பட்டை விளாமிச்சம் வேர், பற்படாகம், சந்தனம் ஆகிய ஐந்து சரக்குகளையும் ஒரு 4.2 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்து கசாயம் செய்து சாப்பிட இந்நோயில் தோன்றும் சுரம் நீங்கும்.


“வாங்கியக் கியாழந்தன்னில் வளர்நிம்பச் சாறுங் கூட்டி, ஒங்கியீருள்ளிச்சாறு முகந்துடன் கூடக்கூட்டி பாங்குள்ள சட்டிக்காய்ந்து பரிவுடன் முரித்துவாங்கி, தீங்கில்லாத தேனுஞ் சேர்த்துத் திறமுட னுள்ளுக் கீயே.”


கசாயத்துடன் பிரிய வேப்ப மரத்தின் பட்டைச் சாறு வெங்காயச்சாறு சேர்த்து சூடு செய்து அத்துடன் தேன் சேர்த்துக் கொடுக்க விரைவில் குணம் உண்டாகும்


தலைமுழுக மருந்து


“கொள்ளடா வேப்பிலையு மஞ்சள்தானுங் குணமான மூதண்டங் கூடச்சேர்த்து, விள்ளடா மோர் விட்டு வரைத்துநன்றாய் மேலாக சிரசிற்கு தேய்த்து தானே, கிள்ளடா வுடம்பெல்லாம் நலங்கேயிட்டுக் கிருபையாய் குளிர்ந்தசலந் தன்னைவார்ப்பாய்,தள்ள டா இப்படியே மூன்றுநாள் தான் தயவாகவொன்றை விட் டொருநாள் மூழ்கே.”


வேப்பிலை மஞ்சள் அருகம்புல் ஆகியவற்றை நன்கு அரைத்து தலை மற்றும் உடல் முழுவதும் தேய்த்து குளிர்ந்த நீரில் மூன்று தடவை ஒரு நாள் விட்டு ஒரு நாள் குளிக்க தலை மற்றும் உடல் முழுவதும் தோன்றிய குருக்கள் மறைந்து புண்கள் ஆறும்.


அவ்வாறு குளித்த பின்பு வேப்பிலை மஞ்சள் இரண்டையும் அரைத்து புண்ணில் பூசி அதன் பின்பு தயிர் தேய்த்து தொடர்ச்சியாக ஒரு நாள் விட்டு ஒரு நாள் குளித்து வர முற்றிலும் குணம் உண்டாகும். அதுபோல் விளக்கெண்ணெய் தேய்த்து உசிலம்பட்டி தேய்த்து குளித்து வரலாம். 13ம் நாள் அல்லது 21 ஆம் நாள் தலைக்கு குளித்த பின்பு மோர் சோறு வெங்காயம் உட்கொள்ள வேண்டும்.


அம்மை புண்கள் ஆற பூசுமருந்து


“ஈய்ந்திட்ட சுரமுந்தீரு மியல்புடன் இரணமு மாறும், வாய்ந்திடு மருந்து தானும் வகையுடனின்னங் கேளாய், பாய்ந்திட சூடன்றானும் பகர்வட்டத் துத்திச் சாற்றில், தேய்ந்திட மத்தித்தேதான் திருவிளக் கெண்ணை சேர்த்து, சாய்ந்திட்டாணத்திற் பூச சகல புண்ணாறுந்தானே.”


அப்படியே புண்கள் ஆறவில்லை என்றால் கற்பூரத்தை துத்தி இலை சாற்றில் கரைத்து அத்துடன் சம அளவு விளக்கெண்ணெய் சேர்த்து புண்களின் மேல் பூச வேண்டும்.


கண்களில் பாதிப்பு ஏற்பட்டால்


“ஆமென்றவிழியதினிற் பூவேவந்தா லதற்கு மொரு மருந்துதா னறையக்கேளு, ஏமென்ற பனங் குருத்தை கருக்கியேதே னிதமாக நயனமதிற்பிழி யத்தீரும், பாமென்ற முருங்கைப்பூ நெரிஞ்சிப்பூவும் பரிவான நந்திவட்டப் பூவுங்கூட்டி, சேருமென்ற சீரகமுங் கூட்டிக்குத்தித் திறமாகப் பிழிந்திடத் தீருந்தானே”


பனங் குருத்தை நெருப்பில் வாட்டி கருக்கி துணியில் முடிந்து பிழிந்து கண்களில் அதன் சாற்றை விட வேண்டும். முருங்கைப்பூ நெருஞ்சில் பூ நந்தியாவட்டைப் பூ மற்றும் சீரகத்தை சம அளவு எடுத்து நசுக்கி ஒரு துணி சுற்றி அழுத்தி பிழிந்து கண்களில் விட குணம் உண்டாகும்.


தொண்டைக்கம்மலுக்கு மருந்து


“தன்மையென்ற வைசூரியது மென்னிக்கட்டி தருகாமல் சேத்துமந்தான் நெஞ்சில்நின்றால், வண்மை யென்றகர்ப்பூர வள்ளிச்சாற்றில் வளமானகோ ரோசினையுங் கூட்டியுண்ண, வெண்மையென்றமொழி யுண்டாய் கம்மல்தீரும் மெல்லியரே நீயிதனை விரும்”


தொண்டையில் புண் மற்றும் வலி ஏற்பட்டால் கற்பூரவள்ளி இலைச்சாற்றில் கோரோசனை சேர்த்து கொடுக்க சுரபங்கம் நீங்கும்.


"பரிவுட னிதந்தப்பாமத் பண்பதாய்ச் செய்துக் கொண்டு, நெறியுடன் சரிந்தபின்பு நீர்மோருஞ் சாதங் கொள்ளு, தரியதிகாரமாகச் சாந்தமாம் பழமுமாகா, சரிபட வெலுமிக்காய் சலம்படி பளியுமாமே."


நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குழைய வடித்த சாதத்தை புளி சேர்க்காமல் மிளகு ரசம் வைத்து உணவு உட்கொள்ள வேண்டும். பின் 14 அல்லது 21ஆம் நாட்களில் அம்மை இறங்கிய பின்பு மூச்சோறு மற்றும் உட்கொள்ள வேண்டும் எலுமிச்சங்காய் மற்றும் பழமொழி சேர்த்துக் கொள்ளலாம். நெல்லிக்காய் பனங்கற்கண்டு வேம்பு காய்ந்த கெளிற்றி, குரவை மீன், பாசிப்பயிறு, வெள்ளாட்டுக் குடல் வற்றல் ஆகியவற்றை உணவில் உட்கொள்ளலாம். காடை, உடும்பு, ஊர்க்குருவி, வாழைக் கச்சல் அத்திப்பிஞ்சு சீனா கற்கண்டு ஆகிய பொருட்களை உணவில் சேர்க்கலாம். தேங்காய் மாங்காய் நல்லெண்ணெய் இலுப்பை எண்ணெய் தாளித்த உணவுகள், சோறு வடிக்கும் ஆவி, நெல்லு வடிக்கும் ஆவி, காய்கறி வேக வைக்கும் ஆவி ஆகியன உட்கொள்ளுதல் மற்றும் முகர்தலை தவிர்க்க வேண்டும்.


“தானென்ற கரும்பனிச்சைக் குணத்தைக் கேளு: தரியாமல் காய்ச்சல்கண்ட நாலாம் நாளில் கானென்ற தலையதனிற் குருவே காணும் கைக்கடங்காக் கடுப்பெடுத்துக் கருகும் மேனி வானென்ற குருவதுவு முள்ளே வாங்கும் வளமாகப் பேதிகண்டு மூர்ச்சை யாகும் கோனென்ற மலஞ்சிறுநீர் கட்டித் தானாய்க் குறிப்பாகப் பதின்மூன்றி லிறங்குந் தானே.”


கரும்பனிச்சை அம்மையில் கடுமையான காய்ச்சல் ஏற்பட்ட நாலாவது நாளில், உச்சியில் குருக்கள் தோன்றி, உடல் முழுமையும் தாங்கொணாத வலி ஏற்பட்டு, உடல் கருகிக் குருக்கள் யாவும் உள்வாங்கும். பேதியுடன் மூர்ச்சை உண்டாகிப் பதின் மூன்றாம் நாளில் இறக்கம் காணும். பேதி கண்ட சில நாளில் மல சலங் கட்டினால் நோய் கண்ட பதின்மூன்றாம் நாள் தானாக இறங்கி வரும்.இறக்கம் கொடாமல் நோயின் வன்மை மிகுமானால், உடல் விரிந்து புண்களில் புழுக்கள் உண்டாகும்; நினைவு மாறும்; மார்பில் கோழை கட்டி மேல் மூச்சு உண்டாகும். இருபத் தொரு நாள்கள் கழித்து முழுக்குணம் ஏற்பட்ட பிறகு தலைமுழுகச் செய்வது நன்று.


கரும்பனிச்சை அம்மையின் அசாத்திய குணம் (Alarming signs of worsening)


“இறங்குமுன்னே உடம்பெல்லாம் விரிந்து போகும் இதமாகப் புழுவதுதா னுண்டாங் கண்டாய் கறங்குபோல் பிறக்கினையு மில்லை யப்பா கனமாக மூச்சதுதான் மேலே காணும் அறங்குபுகழ் நாளிருபத் தொன்று சென்றால் அடைவாகத் தலைமுழுக்கை அன்பாய்ச் செய்வாய் திறங்கமாக் கடவுள்செய லுண்டாகுமானால் திறமாகத் தீருமது திண்ணந் தானே”


இந்நோயில் அம்மைக் கொப்புளங்களின் பூரிப்பு மிகுமானால், உடம்பு வீங்கி விரிந்துபோவதுடன் புண்கள் தோன்றி அதில் புழுக்கள் ஏற்பட்டு நினைவு இழந்து மேல் மூச்சு ஏற்படும். இறையின் அருளால் இருபத்தோராவது நாளில் இறக்கம் கொடுத்துக் குணமானால் தலைமுழுகச் செய்யலாம். இல்லையெனில் தீருவது அரிது. இந்நோய் ஏற்பட்டவுடன் மருந்து கொடுத்துக் குணப்படுத்துவதே சாலச் சிறந்ததாகும். இல்லையேல், நோய் பூரிப்பு அடைந்து, மிகுமானால் பிழைப்பது அரிது.


“தானென்ற வைசூரியத்தின் குணமுஞ்சொன் னோம் தருவான பத்தியவஞ்சனமுஞ் சொன்னேன், வானென்ற மறுமுள்ளின்னி தானஞ் சொன்னேன் வளமான குருபற்பந் தெளிவாய்ச்சொன்னேன், தேனென்ற திருவாகாணத்தின் திறமாக மேற்பூசுஞ் சொன்னேன்பாரு, கானென்ற சித்தருக்கும் முலகத் தோற்குங் கருத்தாகச் சொல்லிவிட்டேன் வைசூரி முற்றே.”


அகத்தியர் கூறிய இந்த மருத்துவ குறிப்புகளை தற்பொழுது தோன்றும் குரங்கம்மைக்கு பயன்படுத்தினால் பலன் உண்டாகும் என சித்தமருத்துவர்கள் நம்புகிறோம். திடீரென நோய்த்தொற்று தீவிரமாகும் (pandemic) பட்சத்தில் இதனை தயங்காமல் பயன்படுத்தலாம்.


பொதுமக்கள் விழிப்புணர்வுக்காக மற்றும் சித்த மருத்துவத்தின் மேல் விருப்பம் உள்ளவர்கள் பயன்படுத்துவதற்காக இந்த தகவல்: சித்த மருத்துவமனைகள் மற்றும் கிளினிக் சங்கம், மதுரை



BUSINESS HOURS OF THE SOCIETY:
9.00 A.M. to 5.00 P.M.

Location:

27, Jaihindpuram I Street,
Madurai - 625011

Contact us:

Cell : +91 9003000250

Email : ashacindia@gmail.com

Visitors

Flag Counter

img

Association of Siddha Hospitals And Clinics

© 2024 Ashac . All Rights Reserved | Powered by